search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் மரணம்"

    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வாலிபர் சிகிச்சையில் இருந்த போது பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத வாலிபர் ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் காதலாக மாறியது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர்.

    18 வயது ஆகாத நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்ததால் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

    தற்போது 18 வயது ஆகி விட்ட நிலையில் திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தார். இதன் பின்னரும் சிறுமியை மறக்க முடியாத நிலையில் வாலிபர் அவருடன் தொடர்பு கொண்டு உள்ளார். இருவருக்குமிடையே மீண்டும் காதல் மலர்ந்தது. அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் வைத்து இருவரும் சந்தித்து பேசினார்கள். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று வாலிபரை அடித்து உதைத்தனர். சிறுமியை தங்களோடு அழைத்துச் சென்றதுடன் வாலிபரை எச்சரித்துவிட்டும் சென்றனர்.

    இதனால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 14-ந்தேதி உயிரிழந்தார்.

    இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனை செய்து வாலிபரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே வாலிபரின் மரணத்தில் திடுக்கிட வைக்கும் வகையில், காதலியால் விஷம் கொடுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வாலிபர் சிகிச்சையில் இருந்த போது பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் காதலியான சிறுமி விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். வாலிபர் சொல்வது உண்மைதானா? என்பதை கண்டு பிடிப்பதற்காக விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது வாலிபர் பொய்யான வாக்குமூலத்தை அளித்திருப்பதும், சிறுமி மீது பழி போடும் எண்ணத்துடன் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து சிறுமி தப்பியுள்ளார். அறியாத பருவத்தில் ஏற்படும் காதல் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய சாட்சியாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×